புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள்- பாகம் 1

 நான்கு சுவிசேச முரண்பாடுகள்.

----------------------------------------------------

புதிய ஏற்பாட்டில் நிறைய முரண்பாடுகள் காணக்கூடியதாக இருக்கும். காரணம் கேள்விப்பட்ட கதைகளை சுவிசேசங்களும் நான்கு முரண்பட்டுக்கொண்டு எழுதப்பட்டிருப்பதோடு, ஒரே சுவிசேசத்துக்குள்ளேயும் முரண்பட்டுக்கொள்வதாக இருக்கிறது. நாம் ஒவ்வொன்றாக காண்போம்.


இந்த பதிவில் உள்ளடங்கும் முரண்பாடுகள்

1.யோசேப்பின் தந்தை யார்? வம்சாவளி எது?

2.இயேசு எப்போது பிறந்தார்?

3.இயேசு பெத்லகேமில் எங்கே பிறந்தார் ?



1.சிறந்த தாயான மரியாளின் புருஷனின் தகப்பன் யார்?

ஐ.மத்தேயு- யோசேப்பின் தகப்பன் யாக்கோபு

யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான் ; அவளிடம் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.”

  — மத்தேயு 1:16 (TBSI)

II.லூக்கா- யோசேப்பின் தகப்பன் ஏலி

“அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரனார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார்.அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;”

  — லூக்கா 3:23 (TBSI)


மாற்கு யோசேப்பு என்ற இந்த நபரை பற்றி வாயே திறக்கவில்லை. யோவான் யோசேப்பை கடந்து பரம்பரை சொல்லவில்லை.


மத்தேயு யோசேப்பின் வம்சவரலாற்றை கூறுவதாகவும், லூக்கா மரியாளின் வம்சவரலாற்றை கூறுவதாகவும் கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் லூக்காவோ யோசேப்பு ஏலியின் மகன் என்று தான் கூறுகிறார். ஏலியின் மருமகன் என்று கூறவில்லை!


 எண்ணாகமம் 27:1-8, 36:1-9 ஆகிய ஒருவனுக்கு ஆண்மகன் இல்லாதபோது அவனது மகளுக்கு சொத்து போக வேண்டும், அவர்கள் தம் தந்தையின் கோத்திரத்திலேயே திருமணம் முடிக்க வேண்டும் என்றே சொல்கிறது.

பைபிளில் எங்குமே மறுமகனின் தந்தையாக மாமனாரை குறிப்பிடும் வழக்கம் கிடையாது. யூத வரலாற்றிலும் கிடையாது.

லூக்கா தனக்கு தெரிந்த வம்ச வரலாற்றையே எழுதியுள்ளார். அதில் ஏலியை யோசிப்பின் தந்தையாக தான் கூறுகிறார். முரண்பாட்டை சமாளிக்க இவர்களாக இட்டுக்கட்டிக்கூறும் விளக்கமே இது.


இதில் மேலதிகமாக மத்தேயு யோசேப்பை சொலமோனின் வம்சத்தில் வந்தவராகவும் (மத் 1:6), லூக்காவோ தாவீதின் அடுத்த மகனான நாத்தானின் வம்சத்தில் வருபவராக சித்தரிக்கிறார் (3:31)

அத்தோடு யோசேப்பு முதல் தாவீது வரை 42 தலைமுறைகளை லூக்கா குறிப்பிடுகிறார் -லூக்கா 3:23-31

மத்தேயுவோ 28 தலைமுறைகளை குறிப்பிடுகிறார்-மத்தேயு 1:6-16. மத்தேயு 14 , 14 பிரித்து கூறுவதற்காக மற்றவர்களை விட்டுவிட்டார் என்று கூறுவது ஏற்க முடியாது. 14 ,14 தலைமுறைகள் என்று அவர் அறிந்ததை தான் சொல்கிறார்.


லூக்கா, மத்தேயு இருவருமே இயேசுவை தாவீதின் பையன் என்று நிரூபிப்பதற்காகவே இவ்வாறு எழுதியுள்ளார். காரணம் மெசியா தாவீதின் குமாரன். ஆனால் இவர்கள் இருவருமே இயேசுவின் ரத்தம் அல்லாத யோசேப்புக்கே வம்சவரலாற்றை எழுதியுள்ளனர்.இது அவர்கள் எவ்வளவு யூத பாரம்பரியத்தை அறிந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள் .


இன்னும் சிலர் சவுல் தாவீதை என் மகனே என கூப்பிட்டதால் (1 சாமுவேல் 24:16), இந்த வழமை உண்டு என்கின்றனர். ஆனால் இது மடத்தனமான வாதமாகும் . தாவீதின் வம்சவரலாற்றை எழுதும்போது தாவீது சவுலின் குமாரன் என்று யாரும் சொல்லப்போவதில்லை. சொல்வதும் இல்லை.. வயதில் மூத்தவர் இளையவரை என் மகனே என்று கூப்பிடுவது வேறு. வம்சவரலாறு வேறு.

----------


2.இயேசு எப்போது பிறந்தார்? கி.மு. 6 இலா? கி.பி. 6 இலா?

மத்தேயு- மகா ஈரோடு ராஜாவின் காலத்தில் பிறந்தார் (கி.மு. 4 க்கு முன்)


¹ " ஈரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,"

² "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்."

³ "ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்."

¹³ "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்."

¹⁹ "ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:" (மத்தேயு 2:1-3,13,19)

ஏரோது ராஜா கி.மு. 72 முதல் கி.மு. 4 வரை வாழ்ந்தவர் ஆவார். அவன் கி.மு. நான்கில் இறந்தான் என்பதால், இயேசு அக்காலத்தில் இரண்டு வயது பிள்ளையாக இருப்பதால், இயேசு குறைந்தது கி.மு. 6 இல் பிறந்திருக்க வேண்டும். இந்த ஏரோதின் மகனும் ஏரோது என அறிப்பட்டாலும் அவர்கள் கி.மு. நான்கு முதல் கி.பி 18வரை இருந்தார். இறந்து போகவில்லை . அவனை அர்கலேயு என்று மத்தேயு குறிப்பிடுகிறார் (மத்தேயு 2:22). இவனுக்கு பயந்து தான் நசரேத்தில் போய் வாழ்ந்ததாக இவர் கூறுகிறார்.

அதாவது கிறிஸ்த்துவானவர் கிறிஸ்துவுக்கு முன் 6 இல் பிறந்திருக்கிறார். (அவர் எந்த கிறிஸ்துவுக்கு முன் பிறந்தாரோ?


லூக்கா- அகஸ்து சீசரின் தேசாதிபதியான சிரேனியுவின் முதலாம் குடிமதிப்பு எழுதும் காலத்தில் பிறந்தார் - கி.பி 6

¹ அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது.

² சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.

³ அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.

⁴ "அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,"

கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

⁶ "அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது."

⁷ "அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே (ஆட்டுத்தொழுவம்) கிடத்தினாள்." (லூக்கா 2:1-7)


வரலாற்றில் சிரேனியு சிரியாவின் கவர்னராக நியமிக்கப்பட்டது மத்தேயு குறிப்பிடும் ஏரோதின் மகனான அர்கலேயுவை கி.பி. 6 இல் பதவிநீக்கிய பின் ஆகும்.

குறைந்தது இந்த குடிமதிப்பு கி.பி. 6 நிகழ்ந்திருக்க வேண்டும்.. இதன்படி லூக்கா இயேசுவை கிறிஸ்துவுக்கு பின் 6 இல் பிறந்ததாக எழுதுகிறார்.

ஆகவே கிறிஸ்து கிறிஸ்துவுக்கு முன் பிறந்தாரா? கிறிஸ்துவுக்கு பின் பிறந்தாரா ? 10-12 வருட காலம் வித்தியாசம் உள்ளது.


மாற்குவும் யோவானும் இதுபற்றி கூறவில்லை.

(அறிவில்லாத விசயத்தில் லூக்கா மூக்கை நுழைவிக்க போனதால் இந்நிகழ்வு ஏற்பட்டது.)

----------


3.இயேசு பெத்லகேமில் எங்கே பிறந்தார்? வீட்டிலா? அறைகள் இல்லாததால் ஆட்டுத்தொழுவத்திலா?


மத்தேயு-மத்தேயுவின்படி இயேசுவின் பெற்றோர் ஏரோது ராஜாவின் காலத்திலேயே பெத்லகேமில் வீடொன்றில் இருந்துள்ளனர். ஏரோதின் மரணத்திற்கு பின்னரே கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் தங்கினர்.


¹ "ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,"

⁹ "ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது."

¹⁰ "அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்."

¹¹ "அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்."

¹³ "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்."

¹⁴ "அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,"

¹⁵ "ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."


²² "ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,"

²³ "நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. "

(மத்தேயு 2:1,9-11,13-15,22-23)

இதன்படி ,பெத்லகேமில் வீட்டில் பிறந்துள்ளார் இயேசு. அங்கே சாஸ்திரிகள் வந்த பின் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்கு தப்பி ஓடினர். அவன் மரணித்தபின்பு நாசரேத்தில் வந்து தங்கியதாக புரிகிறது.


லூக்கா- இயேசுவின் பெற்றோர் நாசரேத்தில் வசித்து வந்தனர். சிரேனியுவின் (ஏரோதின் மகனை பதவிநீக்கிய பின்) குடிமதிப்பிற்காக பெத்லகேம் போனார்கள். அங்கே வீடு கிடைக்கவில்லை. பிள்ளை பெற்று ஆடுமாடு கட்டிப்போடும் இடத்தில் வைத்தனர்.


⁴ "அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,"

கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

⁶ "அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது."

⁷ "அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே (ஆடு மாட்டு தொழுவத்திலே) கிடத்தினாள்."

(லூக்கா 2:4-7)


மத்தேயுவின்படி பெத்லகேமில் வீட்டில் தங்கியிருந்தனர். அங்கே பிள்ளை பெற்றனர். சாஸ்திரிகள் அங்கே வந்தனர்.பின் எகிப்துக்கு போனார்கள். பிறகு ஈரோட்டின் மகனுக்கு பயந்து நாசரேத்தில் தங்கினர். (மத்தேயுவின்படி பெத்லகேம் சொந்த ஊர். பிறகு ஊரை நாசரேத்துக்கு மாற்றிக்கொண்டனர்)..

 லூக்காவின்படியோ, பெத்லகேமில் அவர்களுக்கு அறைகள் கிடைக்கவில்லை. அதனால் ஆட்டுத்தொழுவத்தில் பிள்ளையை பெற்று துணியில் அங்கே வைத்தனர். இங்கே மேய்ப்பர்கள் வந்தனர்.(லூக்கா 2:8-18). அவர்களது சொந்த ஊர் நாசரேத்.(லூக்கா2:5)


இதை தனித்தனியாக முரண்பாடாக நான் கருத்தில் கொள்ளவில்லை. அப்படி எடுத்தால் பட்டியல் இன்னும் நீண்டு விடும்.


தொடர்ச்சி பாகம் 2 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்